ஊழியரின் மோதிர விரலை கடித்து குதறிய சிங்கம்

ஜமைக்காவில் உள்ள மிகப்பெரிய வனவிலங்குகள் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் சிங்கத்திடம் ஊழியர் ஒருவர் சேட்டை செய்து விரல்களை இழந்த பரிதாப சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஜமைக்காவில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு வந்த பார்வையாளர்களைக் கவரும் வகையிலும், அவர்கள் வீடியோ எடுத்துக் கொண்டிருந்ததால், சிங்கத்திடம் தான் விளையாடும் வீடியோ வைரலாகும் என்ற நோக்கத்திலோ இந்த சேட்டையில் ஈடுபட்ட நபர், விரல்களை இழந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இரும்பு வேலிக்குள் இருந்த சிங்கத்தின் முகத்தில் தனது கையால் வருடி விடுவது போலவும், தள்ளுவது போலவும் அந்த ஊழியர் செய்து கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் கோபம் வந்து, அந்த ஊழியரின் விரல்களை லாவகமாக வாய்க்குள் பிடித்துக் கொண்டது.

இப்படி விளையாட்டு விபரீதமாகும் என்று நினைத்துப் பார்க்காத ஊழியரோ, விரல்களைக் காப்பாற்ற என்ன செய்வது என்று தெரியாமல் கையை இழுக்க, மறுபுறம் அந்தப் பெரிய சிங்கமோ பதிலுக்கு தனது பலத்தைக் காட்டியது.

இறுதியில் சிங்கமே மோதிர விரலை முழுமையாகக் கடித்துவிட, மீதமிருந்த விரல் எலும்புடன் மருத்துவமனைக்கு விரைந்தார் அந்த நபர்.