இரண்டு முக்கிய மனுக்களை தொடர உச்ச நீதிமன்றம் அனுமதி

இரண்டு தனித்தனி முக்கிய வழக்குகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் (FR) மனுக்களை தொடர உச்ச நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.

ரோயல் பார்க் கொலைக் குற்றவாளி ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை தொடர்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

2005 ஆம் ஆண்டு இராஜகிரியவில் உள்ள ரோயல் பார்க் காண்டோமினியம் வளாகத்தில் இவோன் ஜோன்சன் படுகொலை செய்யப்பட்ட குற்றத்திற்காக ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஆரம்பத்தில் 2012 ஆம் ஆண்டு 12 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுஇ ஆனால் பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் அவர் கொலைக் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.

ரோயல் பார்க் கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருக்கு 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கினார்.

இதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பின் சட்டபூர்வமான தன்மையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்கள் மீதான வாதத்தை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இந்த மனுக்களை நவம்பர் 17-ம் தேதி வாதத்திற்கு எடுத்துக்கொள்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் தந்தை பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் 2016 ஆம் ஆண்டு துமிந்த சில்வாவிற்கு ஆயுள் தண்டனை விதித்தது.

அரசியல் பழிவாங்கல் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, துமிந்த சில்வாவை விடுதலை செய்ய சிபாரிசு செய்ததையடுத்து, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2021 ஜூன் மாதம் விசேட ஜனாதிபதி மன்னிப்பை வழங்கியிருந்தார்.

மே 2022 இல், உச்ச நீதிமன்றம் துமிந்த சில்வாவை சிறைக் காவலில் வைக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது, அதே நேரத்தில் துமிந்த சில்வாவின் கடவுச்சீட்டை முடக்கும் இடைக்கால உத்தரவையும் பிறப்பித்தது.