நாட்டில் போசாக்கு ஒரு முக்கியமான பிரச்சினையாக காணப்படுகின்றது

-மன்னார் நிருபர்-

கடினமான ஒரு சூழ்நிலையில் நாடு இருக்கும் நிலையில் போசாக்கு ஒரு முக்கியமான பிரச்சினையாக காணப்படுகின்றது. அதிலும் கர்ப்பிணி தாய் மார்களின் போசாக்கு ஒரு முக்கிய அம்சம், என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

மன்னார் ஹற்றன் நஷனல் வங்கியின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போசாக்கு பொதிகள் வழங்கி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணி மனையில், மன்னார் ஹற்றன் நஷனல் வங்கியின் முகாமையாளர் கந்தையா வடிவழகன் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது கலந்து கொண்டு போசாக்கு பொதிகளை வழங்கி வைத்த பின் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

கர்ப்ப காலத்தில் அவர்கள் போசாக்கு உடையவர்களாக இல்லாது விட்டால் அவர்களின் கர்ப்பம் ஒரு சிக்கலான நிலைக்கு உள்ளாகுவதோடு, அவர்களின் உயிருக்கும்இவயிற்றில் உள்ள சிசுவின் உயிருக்கும் ஆபத்தான நிலை ஏற்படும்.

அனைத்தையும் தாண்டி அந்த சிசு பிரசவிக்கப்பட்டால் நிறை குறைவாகவும், வழமையான சிசுக்களை விட நிறைய சவால்களை எதிர் நோக்க வேண்டிய நிலை ஏற்படும்.

கர்ப்ப காலம் முதல் குழந்தை பிறந்து சுமார் 2 வருட காலம் மிக முக்கிய காலமாக அமைகின்றது. குழந்தையின் மூலை வளர்ச்சி முக்கியமான ஒரு விடயம்.

இந்த நிலையில் தற்போதைய சூழ்நிலையில் மிகவும் வசதியாக வாழ்ந்தவர்களும் தற்போது வறுமைக்கோட்டின் கீழ் உள்ள நிலையில் ஹற்றன் நஷனல் வங்கி சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் கர்ப்பிணி தாய்மார்களுக்கு போசணை வழங்கும் திட்டத்தை நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றமை பாராட்டத்தக்கது.

மன்னார் மாவட்டத்தில் 20 கர்ப்பிணி தாய்மார்களுக்கு தொடர்ச்சியாக 3 மாதங்களுக்கு போசாக்கு பொதிகள் வழங்கப்படவுள்ளது.

மன்னாரில் 10 பேருக்கும் நானாட்டான் கிளையினால் 10 பேருக்கும் குறித்த பொதிகள் வழங்கப்படவுள்ளது.

இவ்வாறான சமூக பொறுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மன்னார் ஹற்றன் நஷனல் வங்கியின் முகாமையாளர் மற்றும் ஊழியர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன், என அவர் மேலும் தெரிவித்தார்.