புதுநகர் பாடசாலை முப்பெரும் விழா

சம்மாந்துறை கல்வி வலய கமு/சது/புதுநகர் பாடசாலை முப்பெரும் விழா பாடசாலை அதிபர் எஸ். சிவயோகராஜா தலைமையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இவ்விழாவுக்கு, பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம். அமீர் கலந்துகொண்டதோடு, கௌரவ அதிதியாக கோட்டக்கல்வி அதிகாரி எம்.ஏ. சபூர்தம்பி, விசேட அதிதிகளாக இளம் விஞ்ஞானி எஸ்.வினோஜ்குமார், புஸ்பா பவுன்டேசன் பணிப்பாளர் எஸ்.இராசையா, பிரதி அதிபர் ஏ.எல். சர்ஜுன் உட்பட ஆலயத் தலைவர்கள் மற்றும் ஊர் மக்களும் கலந்து கொண்டனர்.

அங்கு விசேட அதிதியாக கலந்து கொண்ட எஸ் வினோஜ்குமார் கருத்து தெரிவிக்கையில்,

பாடசாலை படிக்கும் மாணவர்களுக்கு பாடசாலை தோட்டங்கள் மற்றும் வீட்டுத் தோட்டங்கள் அமைப்பதற்கு அருகில் உள்ள ஆலயங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் நலன்புரி ஆர்வலர்கள் உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்க வேண்டும்.

இதனால் தற்காலத்தில் தொலைபேசி பாவனை, கொவிட்19 மற்றும் பொருளாதார வீழ்ச்சியினால் மன அழுத்தத்தில் பல மாணவர்கள் உள்ளார்கள். அதற்கு சிறந்த மருந்தாக வீட்டுத்தோட்டம் மற்றும் பாடசாலை தோட்டங்கள் அமையும்.

மேலும் மாணவர்களுக்கு முயற்சியாண்மை சார்ந்த மேலதிக விடயங்களையும் ஆசிரியர்கள் வழங்க வேண்டும். இதனால் எதிர்காலத்தில் படித்து விட்டு தொழிலை தேடுபவர்களாக அல்லாமல் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குபவர்களாக உருவாக்குவார்கள்.

மேலும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்பிக்காமல் மாணவர்களுக்கு மாணவர்களே கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் உதவி செய்தால் அனைத்து மாணவர்களிடமும் தலைமைத்துவ பண்பு உருவாகும்.

கற்றல் செயற்பாடுகளுக்கு உதவியாக சூழல் உள்ள கழிவுப் பொருட்களைக் கொண்டு மாதிரிகளை உருவாக்கி, மாணவர்கள் அதனை பயன்படுத்தினால் புத்தாக்க சிந்தனை விருத்தியடையும், என்றார்.

இவ்விழாவில், கடந்த 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.