திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது

-கிளிநொச்சி நிருபர்-

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வட்டக்கச்சிப் பகுதியில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

தருமபுர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து வட்டக்கச்சி ஸ்ரீ ரங்கநாத பெருமாள் ஆலயத்தில் திருப்பணி அபிவிருத்தி வேலைக்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு கேடர்களை திருடிய சம்பவம் இராமநாதபுரம் பகுதியில் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான பசு மாட்டினை திருடியமை , இதே பகுதியில் தண்ணீர் இறைக்கும் இயந்திரத்தை திருடியமை, வட்டக்கச்சி கல்மடு பகுதியில் நான்கு துவிச்சக்கர வண்டியில் திருடியமை உட்பட இராமநாதபுரம் மாவடியம்மன் ஆலய திருப்பணி உண்டியலை உடைத்து திருடியமை தொடர்பாகவும் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் தர்மபுர பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் அனைவரும் குற்றங்களை ஒப்புக் கொண்டதற்கிணங்க் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.