யாழ். இளைஞர்கள் இருவர் கதிர்காமம் நோக்கி துவிச்சக்கரவண்டி பயணம்

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் – தொல்புரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் இன்று வெள்ளிக்கிழமை கதிர்காமத்தை நோக்கி துவிச்சக்கர வண்டி பயணத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த பயணமானது இன்று காலை 9.15 மணியளவில் யாழ்ப்பாணம் – பண்ணை முனியப்பர் கோவிலடியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது.

இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட பயணம் முல்லைத்தீவைச் சென்றடைந்து, அங்கிருந்து திருகோணமலைக்கு சென்று, பின்னர் மட்டக்களப்புக்கு சென்று பின்னர் கதிர்காமம் சென்று, அங்கிருந்து காலிநோக்கி சென்று பின்னர் யாழ்ப்பாணம் திரும்பவுள்ளனர்.

இந்த பயணமானது 15 நாட்கள் கொண்ட பயணம் என அந்த இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடு, சூழல் மாசுறல் மற்றும் உடல் ஆரோக்கியம் போன்ற விடயங்களை எடுத்துக்காட்டும் முகமாகவே இந்த துவிச்சக்கர வண்டி பயணம் அமையவுள்ளதாக குறித்த இளைஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

தொல்புரத்தைச் சேர்ந்த குகநாதன் நிதுசன் (வயது 24) பாஸ்கரன் சுமித்தன் (22) ஆகிய இரண்டு இளைஞர்களுமே இவ்வாறு துவிச்சக்கர வண்டி பயணத்தை மேற்கொண்டனர்.