வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை கடிதங்களுடன் தபால் ஊழியர் கைது

-நுவரெலியா நிருபர்-

பொகவந்தலாவை தபால் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவரது வீட்டில் இருந்து ஒரு தொகை கடிதங்கள் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளதோடு குறித்த சம்பத்துடன் தொடர்புடைய ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொகவந்தலாவை கொட்டியாக்கலை கீழ்ப்பிரிவு தோட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் புகையிலை தூள் இருப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த உத்தியோகத்தரின் வீட்டை சோதனை இட்ட போதே ஒரு தொகை கடிதங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்தபண்டார தெரிவித்தார்.

பொகவந்தலாவ கொட்டியாகலை பகுதியில் உள்ள மக்களுக்கு பெப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில் மக்களுக்கு வந்த கடிதங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொகவந்தலாவ கொட்டியாக்கலை கீழ்ப்பிரிவு தோட்டத்தை சேர்ந்தவர் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பில் பொகவந்தலாவ தபால் நிலைய முகாமையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதோடு, சந்தேக நபரை ஹட்டன் நீதிவான் நீதிமன்றில் முன்னிலை படுத்துவதற்கான நடவடிக்கையினை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.