தென்கிழக்கு பல்கலைக்கழக இதழியல் டிப்ளோமா பயிற்சி நெறி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

-அம்பாறை நிருபர்-

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடந்த 2017/18 ஆம் ஆண்டிற்கான இதழியல் டிப்ளோமா கற்கை நெறிக்கான டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தலைமையில் பட்டமளிப்பு மண்டபத்தில் இடம்பெற்றது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த பயிற்சிநெறியானது, ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் மற்றும் கொரோனா நோய்த் தொற்று காரணமாக சில வருடங்கள் காலதாமதமானதுடன், கடந்த வருடம் இதற்கான இறுதிப் பரீட்சை இடம்பெற்றிருந்தது. இதில் 41 மாணவர்கள் இந்தப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.

இந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வில், பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஏ.எச். சத்தார், பீடாதிபதிகள், மொழித்துறைத் தலைவரும், இப்பயிற்சி நெறியின் இணைப்பாளருமான பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ், வெளிவாரி கற்கை நிலையத்தின் பணிப்பாளரும், பேராசிரியருமான எம்.எச். தௌபீக் , இ.ரூ.கூட்டுத்தாபன நிகழ்ச்சி தயாரிப்பு பிரிவின் பணிப்பாளர் யூ. எல். யாகூப், சாய்ந்தமருது- மாளிகைக்காடு வர்த்தக சங்க தலைவர் கலாநிதி எம்.எஸ்.எம். முபாரக், சிலோன் மீடியா போரத்தின் முக்கியஸ்தர்கள், முக்கிய ஊடக ஆளுமைகள், ஊடக அமைப்புக்களின் பிரதானிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றில் டிப்ளோமாதாரிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு முதன்முறையாக இன்று இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.