இலங்கை மீது அதிருப்தி : ரஷ்ய விமானங்கள் இடைநிறுத்தம்

ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் எயார்பஸ் ஏ330 (Aeroflot Airbus A330) விமானத்தை இலங்கை அதிகாரிகள் தடுத்து வைத்ததையடுத்து, ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமான நிறுவனம் இலங்கைக்கான தனது விமானங்களை இடைநிறுத்துவதாக ரஷ்ய செய்தி நிறுவனமான TASS தெரிவித்துள்ளது.

ஏரோஃப்ளோட்   ஏ330 விமானம் ஜூன் 2 ஆம் திகதி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மொஸ்கோவிற்கு புறப்படத் தயாரான போது, விமானத்தை குத்தகைக்கு எடுக்கும் நிறுவனத்துடன் ஏற்பட்ட வர்த்தக தகராறு காரணமாக அயர்லாந்தில் உள்ள Celestial Aviation Trading Limited நிறுவனம் தாக்கல் செய்த முறைப்பாட்டினை விசாரித்த கொழும்பு வணிக உயர் நீதிமன்றம், ரஷ்ய ஏரோஃப்ளோட் விமானம் இலங்கையை விட்டு ஜூன் 16ம் திகதி வரை வெளியேற தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

இதேவேளை விமானத்தை பறிமுதல் செய்வதற்கான நீதிமன்ற விசாரணை ஜூன் 8 அன்று திட்டமிடப்பட்டுள்ளது என ரஷ்ய செய்தி நிறுவனமான TASS தெரிவித்துள்ளது.

இதேவேளை, ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா அபேவிக்ரம லியனகே நேற்று வெள்ளிக்கிழமை ரஷ்ய வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டு விமானம் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்து அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.