மாபெரும் உதைபந்தாட்ட போட்டியில் மன்னார் கழகம் வெற்றிக் கேடயத்தை தனதாக்கியது

-மன்னார் நிருபர்-

மறைந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் முதலாம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு மன்னார் மாவட்ட சிரேஷ்ட உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்திய உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் மன்னார் விளையாட்டு கழகம் 2-0 என்ற கோல் அடிப்படையில் யாழ்ப்பாணம் விளையாட்டு கழகத்தை வெற்றியீட்டியுள்ளது.

மன்னார் மாவட்ட சிரேஷ்ட உதை பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த சுற்றுபோட்டியானது கடந்த சனிக்கிழமை காலை ஆரம்பமாகி நேற்று  ஞாயிற்றுக்கிழமை மாலை இறுதி சுற்றுடன் நிறைவடைந்தது.

வட மாகாண ரீதியாக 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இடையே நடைபெற்ற இப்போட்டியில் வட மாகாணத்தில் இருந்து 10 கழகங்கள் போட்டிகளில் கலந்து கொண்டனர்.

இறுதி நாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இவ் சுற்றும் போட்டியானது, மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் மாலை 5 மணியளவில் நடைபெற்ற போது, இறுதி போட்டியில் மன்னார் மாவட்ட ‘A’ அணியினருக்கும் யாழ் மாவட்ட விளையாட்டு கழகத்தினருக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் மன்னார் கழகம் 2-0 கோல்களால் யாழ் கழகத்தை வெற்றி பெற்றது.

இதில் மூன்றாவது இடத்தை மன்னார் மாவட்ட ‘B’ கழகம் வெற்றியீட்டிருந்தது.

இவ் விளையாட்டில் வெற்றியீட்டிய கழகங்கள் மூன்றுக்கும் முதலாவது வெற்றியீட்டிய கழகத்துக்கு வெற்றி கேடயமும் ஒரு லட்சம் ரூபா பணமும், இரண்டாவது இடத்தை பெற்ற கழகத்துக்கு வெற்றி கேடயமும் 50 ஆயிரம் ரூபா பணமும், மூன்றாவது இடத்தை பெற்ற கழகத்துக்கு வெற்றி கேடயமும் 25 ஆயிரம் ரூபா பணமும் வழங்கப்பட்டது.

இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் பி.கிறிஸ்து நாயகம் அடிகளார் கௌரவ விருந்தினராக, மன்னார் அரச அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல், மன்னார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன உப தலைவருமான எஸ்.டுல்சன் நாகவத்த விருந்தினர்களாக, கொழும்பு சொர்க்கோ மாஸ்ரர் அசோசியேஷன் உப தலைவர் டெஸ்மன் ஜோசப், இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன உப பொருளாளர் ஏ.நாகராஜன், இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன செயலாளர் ரி.வரதரராஜன், இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன உப தலைவர் ஈ.அர்னால்ட் என பலரும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்.