தீ வைப்புடன் தொடர்புடையவர் கைது

மிரிஹான சம்பவத்தின் போது பேருந்துக்கு தீ வைத்தமை தொடர்பில் 42 வயதுடைய நபர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

நுகேகொட, கங்கொடவில பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் தெரணியகல பிரதேசத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த மார்ச் 31ஆம் திகதி சந்தேக நபர் இராணுவ பேருந்திற்கு தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

முன்னதாக, சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்கள் உதவி கோரி அவரது உருவப்பட ஓவியத்தை பொலிசார் வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நாளை வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.